Jan 032023

மாத்தளை முத்துமாரியம்மன் கோயில்.

மாத்தளை முத்துமாரியம்மன் கோவில் இலங்கையின் மலையகத்தில் அமைந்துள்ள ஒரு மாரியம்மன் கோவில் ஆகும். இது கண்டியில் இருந்து 27 கிமீ தொலைவில் உள்ள மாத்தளை நகரப் பகுதியின் நடுவே அமைந்துள்ளது.

பெயர்
பெயர்: ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு: இலங்கை
மாகாணம்: மத்திய மாகாணம்
மாவட்டம்: மாத்தளை
அமைவு: மாத்தளை
கோயில் தகவல்கள்
மூலவர்: முத்துமாரியம்மன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு: திராவிடக் கட்டிடக்கலை
வரலாறு
கட்டப்பட்ட நாள்: 1852
அமைத்தவர்: நாட்டுக்கோட்டை நகரத்தார் (செட்டியார்)

இலங்கையில் இந்த ஆலயமே ஐந்து தேர்களைக் கொண்டுள்ளது, தவிர இலங்கையில் மிகவுயரமான 108 அடி உயரமான இராஜகோபுரமும் அமைந்துள்ளது. கொடியேற்றத்தை அடுத்து இரதோற்சவம் 21ஆம் நாள் அன்று நடைபெறும். இரதோற்சவம் அன்று முருகன், சிவன், அம்மன், பிள்ளையார், சண்டேசுவரர் ஆகியோர் இரத பவனி வருவார்கள். இரதபவனியானது கோயிலில் இருந்து வீதியூடாகப் பவனிவருவார்.

இவ்வாலயத்தில் ஆரம்பத்தில் பூஜைகள் மட்டுமே நடைபெற்று வந்துள்ளன. பின்னர், படிப்படியாக திருவிழாக்களும் சப்பரத்தேர் எடுக்கும் வழக்கமும் தோன்றின. 1934 ஆம் ஆண்டளவில் சப்பரத்தை மாற்றி விநாயகரையும் சிவனம்பாள், முருகன் இரதோற்சவமும் நடைபெற்றன.

1955 ஆம் ஆண்டு இராஜகோபுரம் உட்பட பல ஆலய அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பொதுமக்களின் ஒத்துழைப்புடன் ஆலயத்தில் மகா மண்டபம் உட்பட முருகன் கோயில், வசந்த மண்டபம், விஷ்ணு கோயில், நாயன்மார் கோயில், மீனாட்சி, சிவன் கோயில் என்பன திருப்பணி செய்யப்பட்டன.

 

1977 ஆம் ஆண்டு அம்பாளுக்கு சித்திரத்தேர் அமைக்கப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்டது. 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் போது சித்திரத்தேரும் ஏனைய இரதங்களும் எரியூட்டப்பட்டதுடன் கல்யாண மண்டபம் உட்பட பல பகுதிகள் சேதமாக்கப்பட்டு பெரு அழிவுகள் ஏற்படுத்தப்பட்டமையால் ஆலயவளர்ச்சி குன்றியது.

 

1992 ஆம் ஆண்டில் சித்திரத் தேரையும் ஏனைய இரதங்களையும் அமைக்கும் திருப்பணி ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. மேலும், இவ்வாலயத்தில் அமைந்துள்ள 108 அடியைக் கொண்ட இராஜகோபுரம் இந்து சமய மக்களின் ஒற்றுமையையும் இந்து சமய திருப்பணியின் வளர்ச்சியையும் உயர்த்தி நிற்கும் அற்புதக் கோபுரமாகும்.