Nov 032022

தமிழ் வளர்த்த தமிழ் அறிஞர்கள் - பாகம் 1

வீரமாமுனிவர்.
தமிழில் வீரமாமுனிவர் என்று அழைக்கப்படும் பெஸ்கி பாதிரியார் (1680- 1746) இத்தாலியில் பிறந்தவர். கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும் பொருட்டு, 1710ம் ஆண்டில் தமிழகத்துக்கு வந்தார். தமிழின் மீது இருந்த பற்றால் தனது பெயரை வீரமாமுனிவர் என்று மாற்றிக் கொண்டார். எழுத்து, அகரமுதலி, மொழிபெயர்ப்பு, உரைநடை, இலக்கணம், காவியம், பிரபந்தம் என்று பலதுறைகளிலும் முத்திரை பதித்தவர். திறக்குறளை லத்தீனுக்கு மொழி பெயர்த்தார்.

 

ஆறுமுக நாவலர்
தமிழ், ஆங்கிலம், வடமொழிகளில் திறம் பெற்றவர் ஆறுமுக நாவலர் (1822 1879). யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். பாதிரியார் பீட்டர் பெர்சிவல் பைபிளை தமிழில் மொழிமாற்றம் செய்ய இவரிடம் கோரினார். இப்பணிக்கு ஆறுமுக நாவலரே தகுதியுடையவர் என்று அவர் தீர்மானித்தார். சைவ சிந்தாந்தத்தில் கைதேர்ந்த ஆறுமுக நாவலரின் பைபிள் தமிழ் மொழிபெயர்ப்பு அறிஞர்களை வியப்புறச் செய்தது. தொல்காப்பியம், நன்னூல் உள்ளிட்ட இலக்கண நூல்களை அச்சேற்றியவர் ஆறுமுக நாவலர்.

 

உ.வே.சா.
தமிழ்த்தாத்தா என்று அன்புடன் அழைக்கப்பட்ட, உ.வே.சாமிநாத அய்யர் (1855-1942), அழியும் நிலையில் இருந்த, பண்டைய இலக்கிய நூல்களைத் தேடி அச்சிட்டு தமிழின் தொன்மையையும் புகழையும் உலகறியச் செய்தார். 90 புத்தகங்களுக்கு மேல் அச்சிட்ட இவர், 3 ஆயிரம் ஏட்டுச்சுவடி, கையெழுத்தேடுகளையும் வைத்திருந்தார்.
சீவக சிந்தாமணி எனும் சமண இலக்கியத்தின் செழுமையை முழுதாக உணர்ந்ததால், இது போன்ற அரிய படைப்புகளை அழிய விடாமல் காக்க வேண்டும் என்று உறுதி கொண்டார். சீவக சிந்தாமணிக்குப் பின்னர், பத்துப்பாட்டு நூலையும் இவர் வெளியிட்டார்.

 

சோழவந்தான் அரசஞ் சண்முகனார்
மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய அரசஞ் சண்முகனார் (1862-1909), பள்ளியில் ஆங்கில வகுப்புகளை அதிகப்படுத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வெளியேறினார். தலைமை ஆசிரியர் எவ்வளவோ முயன்றும், மீண்டும் பணிக்குத் திரும்ப மறுத்துவிட்டார். மதுரை பாண்டித்துரைத் தேவர், நான்காவது தமிழ்ச்சங்கத்தில் பணியாற்ற அழைத்தார். 1902 முதல் 1906 வரை நான்காண்டுகள் அச்சங்கத்தில் அரும்பணி ஆற்றினார். சிதம்பர விநாயகர் மாலை எனும் நூல் இவரால் இயற்றப்பட்டது.

 சங்கரதாஸ் சுவாமிகள்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலே, ஆங்கில மோகத்தில், தமிழில் பேசுவது கூட கவுரவக் குறைவு என்று கருதிய போது, சங்கரதாஸ் சுவாமிகள் (1866 - 1931) மேடைகளில் தமிழ் வளர்க்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் செயல்பட்டார். அப்போது இசையரங்குகளில் தெலுங்கு ஆதிக்கம் இருந்தது. இனிய செந்தமிழ்ப் பாடல்களை இவர் இயற்றி, தமிழுக்குப் பெருமை சேர்த்தார். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இவரது, பாடல்களை, வசனத்தை உச்சரிக்காத நடிகர்கள் இல்லை என்று கூறலாம். தூத்துக்குடியில் பிறந்த சங்கரதாஸ் சுவாமிகள், மதுரையில் 'தத்துவ மீனலோசனி வித்துவ பால சபா' நாடக சபா மூலம் அற ஒழுக்கத்தையும் கடவுள் உண்மையையும் வளர்த்தார்.

பரிதிமாற் கலைஞர்எனும் சூரியநாராயண சாஸ்திரி (1870-1903).

தமிழ் மொழி தனித்து இயங்கும் ஆற்றல் கொண்டது என்றவர்.

இவர், கல்லூரியில் படிக்கும் போதே, ஆசிரியர்களால் வியந்து பாராட்டப்பட்டவர். மதுரைக் கல்லூரியில் இவர் படித்த போது, இயற்றிய மாலா பஞ்சகம் என்ற நூலை பார்த்த பாஸ்கர சேதுபதி, அவருடைய உயர்கல்விக்கான செலவை ஏற்றுக் கொண்டார்.

சென்னை கிறிஸ்தவ கல்லூரி தலைவர் டாக்டர் மில்லர், டென்னிசன் இயற்றிய ஆர்தரின் இறுதி எனும் நூலின் ஒரு பகுதியை விளக்கினார். 'துடுப்புகள் இருபுறமும் தள்ள, நீரில் மிதந்து செல்லும் படகு, அன்னப்பறவை தன் சிறகு விரித்து விசிறிக் கொண்டு நீந்துவது போல் இருக்கிறது' என்ற உவமை வேறு எந்த மொழியிலும் இடம் பெற்றிருக்குமா என்பது சந்தேகம், என்றார்.வகுப்பில் இருந்த சூரிய நாராயண சாஸ்திரி, 'முடிகின நெடுவாய் முரிதிரை நெடுநீர்வாய்க் கடிதினின் மடவண்ணக் கழியது செல நின்றார்' எனும் 9 நூற்றாண்டுக்கு முந்தைய கம்பரின் உவமை நயத்தை டென்னிசனுக்கு,சாஸ்திரி விளக்கினார். அதைக்கேட்ட மில்லர் அவருக்கு கைகொடுத்துப் பாராட்டினார். மதுரை அருகே வீராச்சேரியில் பிறந்த அவர், கல்லூரி பேராசிரியர், நூலாசிரியர், பதிப்பாசிரியராகவும் விளங்கிய அவர், தனித்தமிழ் உணர்வுக்கு வித்திட்டவர் ஆவார்.

தமிழ் தனித்து இயங்கும் ஆற்றல் பெற்றது என்று உரை நிகழ்த்தினார். எழுதி வந்தார். தன்னுடைய பெயரையும் தூய தமிழில் பரிதிமாற்கலைஞர் என்று மாற்றிக் கொண்டார்.

பரிதிமாற் கலைஞர் பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் குறிப்பிடத்தக்க நூல்கள் பின்வருமாறு:

ரூபவதி,கலாவதி,மான விஜயம்,தனிப்பாசுரத் தொகை,பாவலர் விருந்து,மதிவாணன்,நாடகவியல்,தமிழ் விசயங்கள்,தமிழ் மொழியின் வரலாறு,சித்திரக்கவி விளக்கம்,சூர்ப்ப நகை - புராண நாடகம்.

பதிப்பித்த நூல்கள்:
சயம்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி (1898); மகாலிங்கையர் எழுதிய இலக்கணச்சுருக்கம் (1898); புகழேந்திப்புலவரின் நளவெண்பா (1899); உத்தரகோச மங்கை மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் (1901).

 

பாம்பன் சுவாமிகள் 
முருகப்பெருமான் மீது பாட வேண்டும் என்று பக்தர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, பாம்பன் சுவாமிகள் (1851-1929) பாடிய 'பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம்' பாடினார்.சிவஞான தீபம் வேதாந்த சித்தாந்தப் பாட்டினை திறம்படவும் தெளிவாகவும் எடுத்துரைக்கும் நூல் 1922 அச்சிடப்பட்டு வெளியானது. ஆயிரத்து 101 பாடல்களுக்கு பாம்பன் சுவாமிகளே உரை எழுதி 'திட்பம்' என்று பெயர் சூட்டி வெளியிட்டார்.ராமநாதபுரம் பாம்பனில் பிறந்த இவர், சிறு வயதிலிருந்தே ஏட்டில் முருகப்பெருமான் பற்றி பாடல்களை எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வடமொழி உபநிடதக் கருத்துக்களைத் தமிழில் விளக்குவர். வடசொல் இல்லாத 'சேந்தன் செந்தமிழை' இவர் படைத்தார். இவரியற்றிய சண்முக கவசம் புகழ்பெற்றது.


நா.கதிரைவேற்பிள்ளை.
நா.கதிரைவேற்பிள்ளை (1874-1907) யாழ்ப்பாணத்திலிருந்து தமிழகம் வந்து, தமிழ்ப்பணிக்கும் சைவப்பணிக்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். இவர் ஒரே நேரத்தில் நூறு செயல்களைக் கவனிக்கும் – அவதானிக்கும் – ஆற்றல் படைத்தவர். ஆகையால் இவரை சதாவதானி என்ற சிறப்புப் பட்டத்துடனேயே குறிப்பிடுவர்.

 

இச்சென்னையில், சதாவதானம் , (அதாவது நூறு விஷயங்களை ஏக காலத்தில் கவனமாய்ச் செய்தல்) ஆச்சரியமான பெரு ஞாபகத்தைக் காட்டினார். அக்காலத்திலங்கு வந்திருந்த வித்துவான்கள் முன்னிலையில் அபரிமிதமான வரிசைகளுடைய எண்களின் தொகைகளையும், மிகக் கஷ்டமான தமிழ்ச் செய்யுட்களைச் சொல்லியும், அநேகர் பிரமிக்கும்படியான கேள்விகட்குச் சிறிதும் தாமதமும், சந்தேகமில்லாதும், கலவரப்படாமலும் விடையிறுத்திய பின்னர்தான் சதாவதானியென்ற பெயரால் வித்வத்சிரோமணிகளால் அழைக்கப்பட்டார். அவர் அநேக நூல்களைச் செய்திருப்பவராயிருந்தாலும் அவற்றுள் மிக்க அருமையும் எவரும் தெரிந்துகொள்ளும்படியாய் வெளியாகியது தமிழ்ப் பேரகராதியே. தம்வேலைகளில் மிக்க ஊக்கமும் ஜாக்கிரதையுமுடையவர்.

 

இரு மொழி அகராதி இருந்தபோதிலும், தமிழுக்கு ஒரு மொழி அகராதி வெளிவராமல் இருந்தது. அந்த குறையை போக்கும் வண்ணமாக அவர் வெளியிட்ட அகராதி, தமிழ் உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தது. கதிரைவேற்பிள்ளையின் 'சுப்பிரமணிய பராக்கிரமம்' என்ற நூலின் அடிப்படையில் தான் பழநி தண்டாயுதபாணி கோயிலில் சித்திரங்கள் இடம்பெற்றுள்ளன. பல்வேறு தலப்புராணங்களை இவர் இயற்றியுள்ளார். மதுரை தமிழ்ச்சங்கப் புலவராகவும் அவர் இருந்துள்ளார்.

 

கதிரைவேற் பிள்ளை இயற்றிய நூல்கள்:-

தமிழ்ப் பேரகராதி, அதிவீரராம பாண்டியனாரின் கூர்ம புராணத்துக்கு விளக்க உரை, பழநித் தல புராண விருத்தியுரை, சித்திரக் கவிகள்: கமலபந்தனம், கோபுர பந்தனம், ரத பந்தனம், இரட்டை நாக பந்தனம், சிலேடை வெண்பா, யமகம் நிறைந்த கட்டளைக் கலித்துறை வெண்பா, கருவூர் மான்மியம் (மஹாத்மியம்), சீட்டுக் கவிகள்  பல எழுதியுள்ளார்.