வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் இலங்கையின் வடபகுதியான வன்னிப் பெருநிலப்பரப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வற்றாப்பளை என்னும் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு கண்ணகி அம்மன் ஆலயமாகும். முள்ளியவளை, தண்ணீருற்று ஆகிய கிராமங்களை அயற்கிராமங்களாகக் கொண்டுள்ளதோடு நந்திக்கடலும், வயல்வெளிகளும், பாலைமரச் சோலையும் சூழ்ந்த பசுமையான சூழலில் இவ்வாலயம் அமைந்துள்ளது.
அடங்காப்பற்று என அழைக்கப்படும் இவ் வன்னிப் பிரதேசத்தை வன்னி மன்னர்கள் ஆட்சி செய்தபோது யாழ்ப்பாண மன்னர்கள், போர்த்துக்கேயர், ஒல்லாந்தார் போன்றோருக்கு கப்பம் செலுத்தினர். இவர்களின் பின் வருகைதந்த ஆங்கிலேயர்களை எதிர்க்குமளவிற்கு வீரம் கொண்டவர்களாகப் பிற்காலத்தில் விளங்கினர். இத்தகை வன்னி மன்னர்களால் பரிபாலிக்கப்பட்ட இவ்வாலயத்தை போர்த்துக்கேயர் காலத்தில், போர்த்துக்கேய தளபதியாகிய நெவில் என்பவன் அழிக்க முற்பட்ட போது ஆலயத்தில் நின்ற பன்னிச்சை மரம் தனது காய்களை வீசி ஆலயத்தை அழிக்க விடாது தடுத்தது. இவ்வற்புத வரலாற்றை ஆலயத்தில் இன்றும் படிக்கப்படும் பன்னிச்சை ஆடிய பாடற்சிந்து மூலம் அறிய முடிகிறது.
இலங்கையில் முல்லைத்தீவில் ஆரம்பகாலத்தில் விவசாயிகளால் ஆரம்பிக்கப்பட்ட பொங்கல் வழிபாடானது பின்னர் 1950 களில் வாரம் ஒருநாள் என்ற வழிபாடாகி பின்னர் வேதாகம வழிப்படி முறையான பூசைகளுடன் ஆரம்பிக்கப் பட்டது. 1958 களில் ஆலயபரிபாலன சபையின் கீழ் கொண்டுவரப்பட்டு திங்கள் வெள்ளி தோறும் விசேட அபிசேகம் என்ற முறையில் ஆலய வழிபாடுகள் நடைபெறத் தொடங்கின. இவ்வாலயமானது ஆங்கிலேயர் காலத்திலேயே பிரபலமாக விளங்கியது. இவ்வாலயத்தை தமிழர்கள் மாத்திரமன்றி சிங்களவர்களும் வழிபட்டு வருகின்றனர். உள்நாட்டுப் பிரச்சினைகள் மூலம் ஆலயம் பலமுறை சேதமாகிய போதிலும் 2002 ஆண்டு சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் மீண்டும் புனரமைக்கப்பட்டு வருகின்றது. இதன் இராஜ கோபுரமானது 2006 ஆம் ஆண்டு நிறைவடைய இருந்தபோதிலும் இலங்கை அரசின் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு விதிக்கப்பட்ட பொருட்தடைக் காரணமாக நிலவிவரும் சீமேந்து தட்டுப்பாடு காரணமாக இராஜகோபுர வேலைகள் முழுமையடையவில்லை.