Jan 282023

அக்னிச் சிறகுகள்.

அப்துல் கலாம் அவர்கள் தன்னுடைய இளமைக் காலம், உயர் படிப்பு, விமானம் தான் கனவு என்று இருந்து விதி வசத்தால் மாறி விஞ்ஞானி ஆனது மற்றும் அதில் தனக்குக் கிடைத்த அனுபவங்கள் அனைத்தையும் வாழ்க்கை வரலாறாக தனது சக ஊழியர் அருண் திவாரி உதவியுடன் “அக்னிச் சிறகுகள்” என்ற புத்தகமாக எழுதி இருக்கிறார்.


இளமைக் காலம்.

ராமேஸ்வரத்தில் ஜெயனுல்லாபுதீன், ஆஷியம்மா தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் கலாம். நடுத்தர வசதிக் குடும்பத்தில் இருந்த கலாமுக்கு படிக்க பணம் சிரமமாகவே இருந்து இருக்கிறது. மேற்படிப்பு படிக்க இவரின் சகோதரி தன் நகையை வைத்துக் கொடுத்த பணத்தில் தான் படிப்பையே தொடர்ந்து இருக்கிறார்.

 

இந்து முஸ்லிம்.

கலாமும் சரி அவரது அப்பாவும் சரி மற்ற சமுதாயத்தினருடன் ரொம்ப இணக்கமாக இருந்து இருக்கிறார்கள். அதோடு இவர்கள் இருந்த பகுதியில் இந்து முஸ்லிம் சமுதாயத்தினர் மிகவும் நெருக்கமாகப் பழகி இருக்கிறார்கள். ராமேஸ்வரத்தில் இந்து முஸ்லிம் சமுதாயத்தினர் ஒற்றுமையாக இருந்ததைப் போல இவர் மேற்படிப்பு படிக்கப் போன இடத்தில் இல்லை என்பதைக் குறிப்பிடுகிறார்.

 

கலாமின் தந்தையும் ராமேஸ்வரம் கோவிலின் தலைமை குருக்கள் பஷி லட்சுமண சாஸ்திரியும் நெருங்கிய நண்பர்கள். கலாமும் சாஸ்த்ரி மகனும் ஒரே வகுப்பில் படிப்பவர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள். கலாம் முஸ்லிம் அடையாளத்துடனும் சாஸ்திரி மகன் இந்து அடையாளத்துடனும் அருகருகே அமர்ந்து இருப்பதைப் பார்த்த ஆசிரியர், கலாமை பின் இருக்கையில் சென்று அமரக் கூறுகிறார். இந்த சமயத்தில் சாஸ்திரி மகன் கண்ணீர் விட்டு அழுத காட்சி தன் கண்ணை விட்டு மறையவில்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

 

இதன் பிறகு லட்சுமண சாஸ்திரி பள்ளிக்கு வந்து “குழந்தைகள் மனதில் இது போன்ற சமூக மத வேற்றுமைகளை புகுத்தாதீர்கள்” என்று ஆசிரியரை கண்டித்த பிறகு அவர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதாக கூறி இருக்கிறார். ஒருமுறை லட்சுமண சாஸ்திரி தன் வீட்டிற்கு சாப்பிட அழைக்க அதற்கு அவரது ஆச்சாரமான மனைவி எதிர்ப்பு தெரிவிக்கிறார் ஆனால், தன் மனைவியின் எதிர்ப்பையும் மீறி கலாமிற்கு தானே பரிமாறுகிறார். திரும்ப ஒருமுறை சாப்பிட அழைக்கும் சாஸ்திரி, முன் அனுபவங்களால் கலாம் தயங்கியதைக் கண்டு அவருக்கு ஆறுதல் கூறி அழைத்துச் செல்கிறார். இந்தமுறை அவரது மனைவியே முன்வந்து அனைத்தையும் செய்கிறார்.

சகோதரி கொடுத்த நகை

கலாம் வளர்ச்சியில் அவருடைய ஒன்றுவிட்ட சகோதரர் சம்சுதீன் மற்றும் அவரது சகோதரியின் கணவர் ஜலாலுதீனும் முக்கியப் பங்கு ஆற்றி இருக்கிறார்கள். இவர்களை தனது வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியத் தருணத்திலும் நினைவு கூறுகிறார். பள்ளியில், கல்லூரியில் இவருக்கு அமைந்த ஆசிரியர்கள் சிறப்பானவர்களாகவும் வழிகாட்டியாகவும் இருந்து இருக்கிறார்கள். இதனால் தானோ என்னவோ கலாமுக்கு ஆசிரியர் என்றால் ரொம்பப் பிடிக்கிறது. இதை பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தி இருக்கிறார். விமானம் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்ட கலாம் படிக்க வேண்டியது குறித்து தெளிவான அறிவு இல்லாததால், படிப்பதில் தலையை சுற்றி மூக்கை தொட வேண்டிய நிலை ஏற்பட்டது என்று குறிப்பிடுகிறார். இவர் படிப்பிற்கு இவரது சகோதரி தன் நகையை வைத்து கொடுத்த பணத்தில் படித்து பின் அரசு உதவித் தொகை மூலம் தொடர்ந்து இருக்கிறார். தான் வேலைக்கு சேர்ந்த பிறகு நகையை மீட்டுக்கொடுத்து விட வேண்டும் என்று கூறினார் ஆனால், மீட்டாரா என்பது பற்றி குறிப்பிடவில்லை.

 

 மிகுதி அடுத்த வாரம்...